Thursday, February 9, 2012

போதி மரங்கள்

அப்பா அவசர சிகிச்சைப் பிரிவில். சரியாக எட்டு வருடங்கள் முன்பு நான் typhoid- ல் ஒரு மாதம் படுத்திருந்த அதே மருத்துவமனை.

அப்பாவின் நிலை அறிந்து பெங்களுரிலிருந்து கனத்த இதயமும் கலங்கிய கண்களுமாய் 10 மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவமனை அடைந்தபோது இரவு மணி 11.
வரவேற்புப் பகுதி தாண்டி, செக்யுரிட்டியைக் கடந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு வெளியே வந்தபோது என்னைக் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மூளை தவிப்பதையும் அதை வழிமொழிவதாக இதயம் உரக்கத் துடிப்பதையும் நன்கு உணர முடிந்தது.

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காலை சுளுக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் பாதி வழியில் நடக்க முடியாமல் கண்முட்டத் தண்ணீரோடு நின்றபொழுது, என் 45 கிலோவைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மூச்சிரைத்துக் கொண்டே நடந்த என் அப்பாவின் நெற்றியில் அரும்பிய வியர்வையை அழுதுகொண்டே துடைத்து விட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த முரட்டு வேகமும், முறுகிய உடலும் இன்று கூனிக்குறுகி ஒரு பச்சை கவுனுக்குள் தஞ்சம் புகுந்து, ஒருக்களித்துப் படுத்திருப்பதைப் பார்க்கையில் தொண்டையில் யாரோ கடப்பாறையை வைத்து அழுத்தியதைப் போல ஒரு உணர்வு.

ஒரு வகையில் பார்த்தால் பள்ளிக்கூடங்களும் குருகுலங்களும் கோவில்களும் மடாலயங்களும் சொல்லித்தர முடியாத விஷயங்களை மருத்துவமனைகள் எளிமையாகப் புரியவைத்து விடுகின்றன. மரணம் என் பக்கத்துப் படுக்கை வரை வந்து சென்றபோது 3 நாட்கள் மட்டுமே பழகிய brain hemorrhage நண்பனின் இழப்பை விட வாழ்க்கையின் நிலையின்மை பற்றியே என் மனது அதிகம் ஆராய்ந்தது. 12 வருடங்களாக 2 நாட்களுக்கு ஒருமுறை kidney dialysis செய்து கொண்டு, சாகும் வரைக்கும் அதுதான் ஒரே வழி என்று தெரிந்தும் வீட்டில் படுத்துக் கிடக்காமல் sales representative ஆக பணிசெய்து கொண்டிருக்கும் 22 வயது நண்பனின் நம்பிக்கையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த மருத்துவமனை தான். உள்ளே இருக்கும் ஒரு உயிருக்காக 15 சொந்தங்கள் கண்களை ICU வாசலிலும், கைகளை இதயத்திலும் வைத்துக் கொண்டு இரவும் பகலும் காத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது உறவுகளின் உன்னதம் புரிகிறது. 70 வயது தாத்தாவைத் தள்ளாடியபடியே கைத்தாங்கலாக கழிவறை அழைத்துச் செல்லும் 65 வயதுப் பாட்டியைப் பார்க்கும்போது, உடல் தாண்டி, உணர்வு தாண்டி உயிரால் ஒன்றுபடுகின்ற மணவாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது.

பிஞ்சுக் குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு டாக்டரின் வருகைக்கு மணிக்கணக்காய் காத்துக் கிடக்கும் பெற்றோர்கள்.
Wheel chair- களில் தாயை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் மகன்கள், மகள்கள்.
மனதெல்லாம் வெறுமை, உடலெல்லாம் வியாதி என உறவுகளால் கைவிடப்பட்டு படுக்கையே கதி என்று கிடக்கும் பெருசுகள்.
எத்தனையோ முகங்கள் ஆனால் எல்லா முகங்களிலும் ஒரே கேள்வி - "எப்போது கிடைக்கும் இதிலிருந்து விடுதலை?"

மருத்துவமனைகள் போதிமரங்கள். மடாலயங்களிலும் ஆசிரமங்களிலும் வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு வேண்டுமானால் விடை கிடைக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் தான் அந்தக் கேள்விகள் பிறக்கின்றன.
பிறந்த குழந்தைக்குப் புற்றுநோய் - பிழை படைப்பிலா? இல்லை படைத்தவனிடத்திலா?
இறந்தும் வாழும் கோமா நோயாளிகள் - வரவில் வைப்பதா? செலவில் சேர்ப்பதா?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை - ஆயிரம் வருடங்கள் ஆன்மிகம் தரமுடியாத ஞானத்தை ஒரு ஆஸ்பத்திரி இரவு உணர்த்தி விடுகிறது.

மருத்துவமனைகள் போதிமரங்கள்!

Wednesday, October 5, 2011

எல்லாம் வேண்டும் எனக்கு!

எனக்கென்று ஒரு உலகம், எனக்காக ஒரு தோழி,
கடற்கரையில் சிறு வீடு, களங்கமில்லா ஒரு நிலா
எண்ண எண்ணக் கவிதை, எழுத எழுதக் காகிதம்...
விடியும் வரைக்கும் ஒரு விளக்கு.. உறங்கும் வரைக்கும் ஒரு புத்தகம்!
தட்டி எழுப்பத் தாய், தொட்டுத் தடவ நாய்க்குட்டி!
எட்டும் தூரத்தில் எப்போதும் திருக்குறள் , மழை கொட்டும் நேரத்தில் ஒரு கோப்பை தேநீர்!
பிரிந்து போன காதலின் நினைவு, பின் அழுகையே இல்லாமல் ஒரு துளி கண்ணீர் !

எல்லாம் வேண்டும் எனக்கு!.. இவை இல்லாத வாழ்க்கை எதற்கு ?!

Tuesday, January 18, 2011

அக‌மும் புற‌மும்..



"ஹ‌லோ"..

"அலோ"...

"அக்கா.. ம‌னோக‌ர் பேச‌ற‌ங்க்கா.. சூர‌த் ல‌ இருந்து".

"ம‌னோக‌ரு.. ந‌ல்லாயிருக்கியா க‌ண்ணு?.. போயி ஒரு மாச‌மாச்சு.. நீ போன் ப‌ண்ண‌லைன்னு உங்க‌ம்மா ஒரு பாடு பொல‌ம்பித் தீத்திருச்சி..."

"இல்ல‌க்கா.. க‌ம்ப்பெனி ல‌ வேல‌ கொஞ்ச‌ம் அதிக‌ம்.. புது வேல‌... அதான்.."

"என்ன‌ வேல‌யோ..போ.. இரு க‌ண்ணு உங்க‌ம்மாவ‌ கூப்ப‌ட‌றேன்.. செட்டியார் க‌டை இன்னிக்கு லீவு தான்.. அய்யாவும் வூட்டுல‌ தான் இருக்குதுன்னு நென‌க்க‌றேன்...... இரு பாக்கறேன்.."
"சாவித்திரிக்கா......... ம‌னோக‌ரு.. போன்ல‌ "

................

"க‌ண்ணு ம‌னோக‌ரு.. எப்புடி க‌ண்ணு இருக்க‌ற‌?.. "

"ந‌ல்லா இருக்க‌ம்மா.. நீங்க‌ எல்லாரும் எப்டி இருக்கீங்க‌?.. அப்பா, செல்வி எல்லாரும்?..."

"எல்லாரும் ந‌ல்லா இருக்கோண்டா.... துணிக்க‌ட‌யில‌ வேல‌ கெட‌ச்சி சூர‌த் போன‌ அண்ண‌ன் போன் ப‌ண்ணுச்சா ப‌ண்ணுச்சானு ஒரு மாசமா செல்வி தான் ராணி அக்கா கிட்ட‌ தென‌மும் கேட்டுட்ட்டே இருந்த்திச்சு.. சாப்பாடெல்லாம் அங்க‌ வ‌ச‌தி யா க‌ண்ணு? ந‌ம்ம‌ ஊரு சாப்பாடு எல்லாம் கெடைக்குதா?"

"ஆமா.. நீ வேணா கூட‌ப்போயி தென‌மும் இட்லி சுட்டுப் போடேன்... வுட்டா பேசிக்கிட்டே இருப்பியே... குடு புள்ள‌ போன‌... "

"ம‌னோக‌ரு... என்ன‌டா... வேல‌ எல்லாம் ஒத்துப் போகுதா?"

"ப‌ர‌வால்ல‌ப்பா.. தீபாவ‌ளி நேர‌ங்க‌ற‌துனால‌ கொஞ்ச‌ம் வேல‌ அதிக‌ம்.. ப‌ர‌வால்ல‌.."

"ம்.. ஒட‌ம்ப‌ பாத்துக்க‌ய்யா... யாரு அந்த‌ப் பாத்தர‌க் க‌ட‌க்கார‌ ப‌ய‌ ம‌ணி கூட‌ தான‌ த‌ங்கியிருக்க‌?.. "

"ஆமாப்பா.. அவ‌ங்கூட‌த்தான்... கிட்ட்த்தட்ட 2 வ‌ருச‌மா இங்க‌ தான் இருக்கான் அவ‌ன்... ப‌க்க‌த்துல‌ ஒரு எலெக்ட்ரிக் க‌ட‌யில‌ வேல‌"

"ம்.. பாத்து இருக்க‌னுண்டா.. அவ‌ன் ஊர்ல‌ இருக்கும்போதே கொஞ்ச‌ம் ஒரு மாரி.. ஊதாரிப்ப‌ய‌... நீ பாட்டுக்கு விட்டேத்தியா இருக்காத‌... காசு ப‌ண‌த்த‌ எல்லாம் வீட்டுல‌ வெச்சா, க‌ரெக்ட்டா பாத்து ப‌த்தர‌மா வ‌க்க‌ணும்.. முடிஞ்ச‌ அளவுக்கு வேற‌ வீடு கீடு பாத்துட்டுப் போற‌க்கு வ‌ழிய‌ப்பாரு சீக்க‌ர‌ம் ... அந்தப் ப‌ய‌லுக‌ளே கொஞ்ச‌ம் சிக்க‌ல் தான்.. ந‌ம்ம‌ கையில‌ நாலு காச‌ப் பாத்தானுக‌ன்னா பொறுக்காது... ந‌ம்ம‌ தான் க‌வ‌ன‌மா இருந்துக்க‌னும்... "

"ச‌ரிப்பா... "

.......
.......
.......
.......


10 நிமிட‌த்துக்கு 41 ரூபாய். ப‌ணத்தைக் கொடுத்த பின் லுங்கியை ம‌டித்துக் க‌ட்டிவிட்டு தெருவில் ந‌ட‌க்கும்போது ம‌ணி சொன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ணி போல‌ ஒலித்த‌து..

"பைத்திய‌க்கார‌னா டா நீயி?.. வ‌ந்து ஒரு மாச‌மாயும் வேல‌ கெட‌க்க‌ல‌ன்னு வீட்ல‌ சொல்றேங்க‌ற?.. அவ‌ங்க‌ எதோ ப‌ய‌னுக்கு இத்தன‌ வ‌ருச‌ங்க‌ழிச்சு இப்ப‌ தான் வேல கெட‌ச்சிருக்குனு நிம்ம‌தியா இருப்பாங்க‌... இப்போ போயி...

உங்கிட்ட‌ கேட்டனா நா வாட‌க‌ குடு, செல‌வுக் க‌ண‌க்கு பாருன்னு... போயி வேல‌ தேட‌ற‌ வ‌ழிய‌ப்பாப்பானா... இதுல‌ ச‌பதம் உடராரு.. வேல‌ கெட‌ச்சாத்தான் போன் ப‌ண்ணுவேன்னு.. டேய்.. அப்புடி எல்லாம் ரோச‌ம் பாத்தா நாங்க‌ இங்க‌ வ‌ந்த‌ப்போ நாலு மாச‌ம் சோறு த‌ண்ணி கெட‌ச்சிருக்காது...

இந்தா.. புடி இத‌... 50 ரூபா இருக்கு.. போயி மொத‌ல்ல‌ வீட்டுக்கு போன‌ப் போடு.. போயி போன் ப‌ண்ணு.....
போடாங்க‌றேன்....
என்ன‌மோ ஏதோன்னு உக்காந்திட்ருக்கும் உஙக‌ம்மா"..


காளிய‌ப்ப‌ செட்டியார் க‌டையின் க‌ண‌க்கு வ‌ழ‌க்கு தெரிந்த‌ அள‌வுக்கு ம‌னிதர்க‌ளின் ம‌ன‌சு தெரிய‌வில்லை அப்பாவுக்கு ...

Friday, February 26, 2010

த‌மிழ் விடு தூது

என் த‌மிழ் ந‌ண்ப‌ ந‌ண்பிக‌ளுக்கு,

வ‌ண‌க்க‌ம்.
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே த‌மிழில் ஏதேனும் எழுத‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் என‌க்குள் இருந்து கொண்டே இருந்த‌து. 17 வ‌ருட‌ங்க‌ள் த‌மிழ் வ‌ழிப் ப‌யின்ற‌தில் என‌க்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஆனால் க‌ல்லூரியில் மெல்ல‌த் தேய்ந்த‌ த‌மிழுட‌னான‌ தொட‌ர்பு ப‌‌ணியிட‌ம் பெய‌ர்ந்த‌தும் முழுதாய் அறுந்த‌து. க‌ணிப்பொறி வாழ்க்கையில் எழுதுவ‌து என்ப‌தே எப்போதோ என்று ஆகிவிட‌, த‌மிழில் எழுதுத‌ல் சாத்திய‌ம‌ற்றுப் போன‌து.

இப்போது அத‌ற்க்கு வாய்ப்பு கிடைத்த‌தில் ம‌கிழ்ச்சி. வித்தியாச‌மான‌ சிந்த‌னைக‌ளை எழுத‌ வேண்டுமென்ற‌ ஆசை. என் ப‌ள்ளி நாட்க‌ளில் எழுதிய‌ க‌தை க‌விதைக‌ளையும் மென்வ‌டிவ‌மாக்கிப் ப‌டைப்ப‌தாய் உத்தேச‌ம். பிள்ளையார் சுழியாய் முத‌லில் ஒரு குறுங்க‌தை.

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒரே ஒரு வ‌ரியாக‌ இருந்த்தாலும் என்னை உற்சாக‌ப் ப‌டுத்த‌வோ அல்ல‌து திருத்திக் கொள்ள‌வோ அது உத‌வுமேயானால் உங்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள் எப்போதும்.

இனி நீங்க‌ளும் என் ப‌திப்புக‌ளும்.

காத‌லாகிக் க‌சிந்து..

'

ப்ச்ச்..

"என்னங்க இது.. restaurant ல.. மத்தவங்க எல்லாம் இருக்காங்க இல்ல?"

ஆனாலும் அதில் ஒரு துளி கோபம் இல்லை. சந்தோஷமும் வெட்கமும் கலந்த இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வு அது என்பதை நான் மட்டுமே உணர்வேன்.

என்னை விட அதிர்ஷ்ட்டசாலி எவனும் இல்லை என்கிற எண்ணம் திண்ணமாய் இருந்த்த கல்லூரிக் காலம் அது.

"அகிலா"!!

அவ‌ள் பேசப்படும், நினைக்கப்படும், நுகரப்படும் இடமெல்லாம் ஒரு மழைத்துளி விழுந்த்திருந்தால் என் கல்லூரி வளாகம் ஒரு வங்காள விரிகுடாவாகியிருக்கும். அவளின் அளவான பேச்சும் எச்சரிக்கையான வார்த்தைகளும் உறுதியான எதிர்கொள்ளலும் காளையர் பலரின் கண்களுக்கு அவளை சிம்மசொப்பனமாகவே வைத்திருந்தன. சுறா மீன்கள் பல சுற்றி இருக்க அந்த தேவதைக்கு இந்த சுண்டெலியைப் பிடித்துப் போனது எப்படி என்பது, பறக்கும் தட்டுக்கு அடுத்ததாக அறிவியல் ஆராய வேண்டிய இன்னொரு மர்மப் புதிர்.

என்று புலர்ந்தது ,எப்படி மலர்ந்தது எனக்கும் நினைவில்லை அவளுக்கும் நினைவில்லை. ஆனால் அந்தப் ப்ன்னிரண்டு மாதங்கள் எங்கள் இருவர் நினைவிலும் எங்களைத் தவிர வேறொன்றும் இல்லை.
நட்பா? காதலா?. விடை இல்லை. விளக்கம் அறிய அன்று விருப்பமும் இல்லை.
"எது இருந்ததோ அது நன்றாகவே இருந்த்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது."

எத்தனை சுகமாய் இருந்தாலும் ஒரு நாள் இல்லை ம‌ற்றொரு நாள் கருவறை விடுத்துப் பிரபஞ்சத்தைத் தொடும் பிஞ்சுக் குழந்தை போல் ஒரு நாள் நாங்களும் உணர்ந்த்தோம் இனியும் இது காதலென்று புரியாவிட்டால் அது காதலுக்கும் நன்றன்று; காதலர்க்கும் நன்றன்று.

காதலென்று உணர்ந்த மாத்திரத்தில் மழை போலப் பொழிந்தன பல கேள்விகள்.
நிச்சயமாய்த் திருமணமா? திருமணம் தான் நிச்சயமா? ஊர் தான் ஏற்குமா? உல‌க‌ம் பார்க்குமா?
சாதி,மதம், அண்ணன், தங்கை, பெற்றோர், சுற்றம், பணம், அந்தஸ்த்து, குலம், நிலம்... காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடையில் ஒரு எள் அளவுத் தொலைவில் பதினாயிரம் மைல்கற்கள், பல நூறு தடைக்கற்கள். சில நூறு எங்களுக்கும்.

எந்தக் காதலும் தோற்ப்பதில்லை. அதன் வெற்றி சில பல ஜன்மங்கள் ஒத்திப்போடவே படுகிறது.
தன் கற்பு கொள்ளையடிக்கப் பட்டுக்கொண்டிருப்பதை அறிந்தும், வண்டு அமர வசதி செய்து தரும் மலரைப் போல, விதியால் நாங்களும் சிரித்துக் கொண்டே பிரிய வேண்டியிருந்த்தது; பின்னர் நினைத்துக் கொண்டே வாழவும் முடிந்தது.

ஆயின பதினாறு ஆண்டுகள். இரு வேறு பாதைகள் தொலைதூர‌ப் பயணம். தக்காண பீடபூமியாய்த் தேய்ந்தன அந்த‌ இனிமையான‌ ப‌ழைய‌ நினைவுகள்.

கல்யாண நாள் இன்று. மனைவியும் நானும் தனிமையில் ஓர் உணவு விடுதியில். கனவிலும் நினைக்கவில்லை விதி அந்த சூறாவளியைப் பதினாறு ஆண்டுகள் கழித்து என் பக்கத்து மேசைக்குக் கொண்டு வரும் என்று. அதே அகிலா. ஒரு தேய்பிறைக்காலத்து நிலாவாய்.

பார்வைகள் உரசியதும் இதயத்தில் ஒரு பிரெஞ்சுப் புரட்ச்சி. தொண்டையில் ஏதோ ஒன்று அழுத்துவதாய் உணர்வு. இத‌ய‌த்தின் ஒரு சுவ‌ர் பெர்லின் சுவ‌ராய் உடைந்தது. பின் உறைந்த‌து.
மூளை சுறுசுறுப்பாய் பழைய நினைவுக‌ளை தூசு தட்ட, நியூரான்கள் பிண்ணிப் பிணைந்து பல புதிய யோசனைகளைப் பரிசீலிக்க, உதடுகள் வார்த்தைகளைத் தேடிப் பிடிக்க, கணத்தது நெஞ்சம்.

நான்கு கண்கள். நான்கு துளிகள். ஒரே நேர‌த்தில்.

அவளுக்கும் இன்று தான் திருமண நாளோ? பக்கத்தில் யார்?க‌ண‌வ‌னா? கையில் என்ன குழந்தையா? விடை தேட‌ முற்ப‌டும் முன் மூளை ஒரு முடிவுக்கு வந்திருந்தது. தெரியாதது போல‌த் திரும்பிக் கொள்ள‌ க‌ண்க‌ளுக்குக் க‌ட்ட‌ளை இட‌ப்ப‌ட்ட‌து.


"என்ன‌ ஆச்சு திடீர்னு ?" என் ம‌னைவியின் கைக‌ள் என் நெற்றியைத் தொட்ட‌தில் என் நினைவுக‌ள் நிக‌ழ்கால‌த்திற்கு திரும்பிய‌து.
"ஒரு மாரி ஆய்ட்டீங‌க‌?.. உட‌ம்பு கிட‌ம்பு ச‌ரியில்ல‌யா?" .
ஆறு அங்குல‌ இடைவெளியில் தெரிந்த‌ என் ம‌னைவியின் க‌ண்க‌ளில் உண்மையான‌ அக்க‌றையும் ப‌த‌ற்ற‌ம் க‌ல‌ந்த‌ நேச‌மும். சில‌ நொடிக‌ள் என் க‌ண்க‌ள் என் ம‌னைவியின் க‌ண்க‌ளை உற்று நோக்கின‌. ஒரு சில‌ க‌ண‌ங்க‌ள் அவ‌ள் நினைவு சுத்த‌மாய் என்னை விட்டுப் போன‌தை நினைத்தால் என‌க்குள் ஒரு குற்ற‌ உண‌ர்வு. திடீரென்று இந்த‌ க‌ண‌ம் தான் அவ‌ளை முழுமையாய் உள்வாங்கிக் கொண்ட‌தாக‌ தோன்றிற்று. போதி ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்த‌ புத்த‌ன் போல‌ ஒரு திடீர் ஞான‌ம். ப‌தினாறு வ‌ருட‌ங்க‌ள் என‌க்காக‌வே வாழ்ந்த‌ க‌ய‌ல்விழியின் நேச‌ம் எல்லாவ‌ற்றையும் விட‌ப் பெரிய‌தாய் தெரிந்த‌து. அவ‌ளுகென்று இதுவ‌ரை எதுவும் செய்த‌தாய் என‌க்கு நினைவில்லை. அவ‌ள் க‌ண்க‌ளில் தெரிந்த‌ நேச‌ம் ப‌தினாறு ஆண்டுக‌ளும் இல‌வ‌ச‌மாக‌வே கிடைத்த‌தால் அத‌ன் அருமையை நான் உண‌ர‌வில்லை என்றே என‌க்குப் ப‌ட்ட‌து.

அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்ட‌ நிமிட‌ம் அவ‌ள் உச்ச‌ந்த‌‌லை என் கண்ணீர்த் துளிக‌ளால் ஈர‌ம் வாங்கிய‌து. அந்த‌க் க‌ணணீரோடு அகிலா நினைவுக‌ளும் க‌ரைந்தது ம‌ட்டும் நிச்ச‌ய‌ம்.

"என்னங்க இது.. restaurant ல.. மத்தவங்க எல்லாம் இருக்காங்க இல்ல?"

ஆனாலும் அதில் ஒரு துளி கோபம் இல்லை. சந்தோஷமும் வெட்கமும் கலந்த இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வு அது என்பதை நான் மட்டுமே உணர்வேன்.